விருதுநகர், ஆக.1:காரியாபட்டி ஒன்றியம் கூவர்குளம் கிராமத்தை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் முத்துகருப்பன் மனைவி ஐஸ்வர்யா(23) நேற்று முன்தினம் இரவு பிரசவ வலியால் துடித்துள்ளார். திருச்சுழி அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று ஐஸ்வர்யாவை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு வரும் வழியில் ஐஸ்வர்யாவிற்கு குழந்தை பிறக்கும் நிலை ஏற்பட்டதால் கே.கே.எஸ்.எஸ்.நகர் பஸ் நிறுத்தம் அருகில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது.
ஆம்புலன்ஸில் இருந்த அவசரகால மருத்துவ உதவியாளர் ஜெயக்குமார், டிரைவர் கருப்பையா உதவியுடன் ஐஸ்வர்யாவிற்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாயும், சேயும் சேர்க்கப்பட்டு நலமுடன் உள்ளனர். மருத்துவ உதவியாளர், டிரைவர் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி பாராட்டினார்.