Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண வழக்கு அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி, செப். 30: கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மாணவி மதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி (17) என்பவர் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இந்நிலையில் தனியார் பள்ளி மாணவி மதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்திகா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் 1360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் இவ்வழக்கில் இருந்து ஆசிரியர்கள் ஹரிபிரியா, கீர்த்தனா ஆகிய இருவரும் நீக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் இருந்து ஆசிரியர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறு விசாரணை செய்திட வலியுறுத்தி மதியின் தாய் செல்வி ஆட்சேபனை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதி ஜெயவேல் மனுவை தள்ளுபடி செய்து

உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் அப்போதைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், விசாரணை மேற்கொண்ட போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட 36 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவி மதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் குறித்த வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயவேல் உத்தரவிட்டார்.