Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறைந்த வட்டியில் கடன், பகுதிநேர வேலை எனக்கூறி புதுச்சேரி பெண் உள்பட 10 பேரிடம் ரூ.2.12 லட்சம் ஆன்லைன் மோசடி

புதுச்சேரி, நவ. 27: புதுச்சேரியில் குறைந்த வட்டியில் கடன், பகுதிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பெண் உள்பட 10 பேரிடம் ரூ.2.12 லட்சத்தை ஆன்லைன் வாயிலாக மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். புதுச்சேரி அரியூரை சேர்ந்த ஆண் நபரை தனியார் நிதி நிறுவன அதிகாரி என அறிமுகம் செய்து, ரூ.10 லட்சம் குறைந்த வட்டியில் கடன் தருவதாகவும், அதற்கு செயல்முறை கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அவர், அந்த தொகையை அனுப்பியுள்ளார். ஆனால் கூறியபடி கடன் தரவில்லை. அதன்பிறகே அவருக்கு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதேபோல், திருபுவனை பகுதியை சேர்ந்த ஆண் நபரிடம் ரூ.3 லட்சம் முத்ரா கடன் தருவதாகவும், அதற்கு செயல்முறை கட்டணம் எனக்கூறியும் ரூ.18,100ஐ மர்ம நபர் பறித்துள்ளார்.

இதேபோன்று, முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 2 ஆண் நபர்களிடம் அவர்களது கிரெடிட் கார்டில் இருந்து அவர்களுக்கு தெரியாமலே ரூ.28,050 மற்றும் ரூ.60,978ஐ மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். முதலியார்பேட்டையை சேர்ந்த ஆண் நபர், முகநூரில் நான்குசக்கர டயர் விளம்பரத்தை பார்த்து ரூ.4 ஆயிரத்துக்கு ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார். முத்துபிள்ளைபாளையத்தை சேர்ந்த ஆண் நபர், இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.450க்கு டிசர்ட் ஆர்டர் செய்தும், அய்யங்குட்டிபாளையத்தைச் சேர்ந்த ஆண் நபர், இன்ஸ்டாகிராமில் வந்த மினி எல்இடி விளம்பரத்தை பார்த்து ரூ.399க்கு ஆர்டர் செய்தும் ஏமாந்துள்ளனர்.

திருபுவனையை சேர்ந்த ஆண் நபருக்கு வாட்ஸ்அப்பில் எஸ்பிஐ வங்கி போல் கேஒய்சி அப்டேட் எனக்கூறி ஏபிகே பைல் அனுப்பி, ஓடிபியை கேட்டு ரூ.15,400ஐ பறித்துள்ளனர். அதேபோல், ஆன்லைன் பகுதிநேர வேலையில் வீட்டில் இருந்தவாறு அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்து கூறி கூடப்பாக்கத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.20,169ஐ மர்மநபர் அபகரித்துள்ளார். சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர், லோன் ஆப் மூலம் கடன்பெற்று, அதனை உரிய நேரத்தில் திரும்ப செலுத்தியும் மார்பிங் போட்டோ அனுப்பி ரூ.15,260ஐ மர்ம நபர் மோசடி செய்துள்ளார்.மேற்கண்ட பெண் உள்பட 10 பேர் மொத்தம் ரூ.2.12 லட்சத்தை மோசடி ஆசாமிகளிடம் இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.