Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

குடும்ப டாக்டர் போல் மெசேஜ் அனுப்பி பணம் பறிப்பு லாட்டரி சீட்டு விழுந்து இருப்பதாக கூறி பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

புதுச்சேரி, நவ. 26: புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபருக்கு அவரது குடும்ப டாக்டர் அனுப்புவது போல் வாட்ஸ்அப்பில் மர்ம நபர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் அவசர தேவைக்காக ரூ.65 ஆயிரம் பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக அனுப்பி வைக்குமாறும் கூறப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பிய ஆண் நபர், மேற்கண்ட பணத்தை அனுப்பியுள்ளார். அதன்பிறகே அவருக்கு இது மோசடி வேலை என தெரியவந்தது. இதேபோல், முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த பெண்ணின் வங்கிக் கணக்கில் அவருக்கு தெரியாமலேயே ரூ.7,452ஐ மர்ம நபர் எடுத்துள்ளனர். பிள்ளைச்சாவடி பகுதியை சேர்ந்த ஆண் நபர், உலர்பழம், நட்ஸ் வகைகளை வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து ரூ.16,830ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். சாரம் பகுதியை சேர்ந்த ஆண் நபர், ஆண்லைன் தளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து லேப்டாப் ஆர்டர் செய்து ரூ.42 ஆயிரம் ஏமாந்துள்ளார். மணவெளி பகுதியை சேர்ந்த ஆண் நபர் லோன் ஆப் மூலம் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்திய பிறகும் மேற்கொண்டு பணம் கேட்டு மார்பிங் போட்டோ அனுப்பி ரூ.4,500ஐ மர்ம நபர் பறித்துள்ளார்.

இதேபோல் தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த பெண்ணிடம் தனியார் நிதிநிறுவன லோன் அதிகாரி போல் பேசி ரூ.1 லட்சம் கடனை குறைந்த வட்டியில் தருவதாகவும், அதற்கு செயல்முறை கட்டணம் என்று கூறியும் ரூ.27,800ஐ மர்ம நபர் மோசடி செய்துள்ளார். கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த ஆண் நபரின் செல்போனுக்கு பணம் கிரெடிட் ஆவது போல் மெசேஜ் அனுப்பி, அதன் மூலமாக அவரிடம் வங்கி தகவல்களை பெற்று, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்தை மர்ம நபர் ஏமாற்றியுள்ளார். இதேபோன்று, பாகூரை சேர்ந்த பெண், பேஸ்புக்கில் கேரள லாட்டரி டிக்கெட் விளம்பரத்தை பார்த்து ரூ.40 செலுத்தியுள்ளார். பின்னர், லாட்டரி ஏஜெண்ட் எனக்கூறி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு, உங்களுக்கு லாட்டரி சீட்டு விழுந்து இருப்பதாகவும், அதற்கு செயல்முறை கட்டணம், ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி ரூ.7.08 லட்சத்தை பறித்துள்ளனர். மேற்கண்ட பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உள்பட 8 பேர், இணைய மோசடிகள் மூலம் ரூ.9 லட்சம் ஏமாந்துள்ளனர். இது குறித்த அளித்த புகார்களின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.