தொடர்ந்து வரத்து அதிகரித்து வருவதால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறப்பு
சேத்தியாத்தோப்பு, அக். 25:கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பழமையான அணைக்கட்டு அமைந்துள்ளது. 170 ஆண்டு பழமையான அணைக்கட்டான இதில் 7.5 அடி மொத்த நீர் கொள்ளளவு ஆக இருந்து வருகிறது. தற்போது அணைக்கட்டு பகுதி மற்றும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வரும் கனமழை, மேற்கு பகுதியில் உள்ள நீர் தேக்கும் இடங்களான மணிமுத்தாறு, பிளாந்துறை அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வடிகால் பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் அணைகட்டுக்கு வந்தது. தற்போது நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
தற்போது சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு நீர்வரத்து மணிமுத்தாறு வழியாக 2000 கன அடியும், பிளாந்துறை அணைக்கட்டு பகுதியில் இருந்து ஆயிரம் கன அடியும் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கட்டுக்கு வரும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மூன்று ஷட்டர்கள் மூலம் திறந்து வெள்ளாற்றில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் போதுமான பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு நீர் தேக்கும் அளவை உயர்த்தி நடவடிக்கை எடுத்தால் இதன் மேட்டுப்பகுதி மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் நீர்மட்டம் மேம்படவும், தடையற்ற பாசனத்திற்கு வழி செய்யும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

