சின்னசேலம், செப். 23: சின்னசேலம் அருகே மொபட் மீது பைக் மோதி மகள் பலியானார். தாய் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சின்னசேலம் அருகே தாகம்தீர்த்தாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (50). இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ரோஷிணி (20) என்ற பொறியியல் படித்த மகளும், மகாராஜா (16) என்ற மகனும் உள்ளனர். மேலும் இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக குரால்காட்டு கொட்டாய் பகுதியில் விவசாய நிலம் வாங்கி, விவசாயம் செய்து வருவதுடன், அங்கேயே வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுகந்தியும், அவரது மகளும் மொபட்டில் தாகம்தீர்த்தாபுரம் புற்றுமாரியம்மன் கோயிலுக்கு சென்று குலதெய்வத்தை வழிபட்டு விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். மொபட்டை சுகந்தி ஓட்ட, அவரது மகள் ரோஷிணி பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார். காளசமுத்திரம் ஏரிக்கரை அருகில் சென்றபோது எதிரில் புவனகிரி பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்து பைக், சுகந்தி ஓட்டி வந்த மொபட் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய், மகள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், அவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயமடைந்த ரோஷிணி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயம் அடைந்த சுகந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகாலிங்கம் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் விபத்து ஏற்படுத்திய அஜித்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.