விழுப்புரம், ஆக. 23: விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் விழுப்புரம் அருகே பானாம்பட்டு பாதையைச் சேர்ந்த ஆதி(எ)சிவபாலன்(48) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்று வருகிறார். இந்நிலையில் நேற்று 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை உடற்கல்வி பாட இடைவேளையின்போது விளையாட்டு மைதானத்திற்கு பகுதி நேர ஆசிரியர் சிவபாலன் அழைத்து சென்றுள்ளார்.பின்னர் அங்கு மாணவிகளின் கண்களை கட்டி விளையாட சொல்லி உள்ளாராம்.
அப்போது சில மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும் பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் பகுதிநேர ஆசிரியர் சிவபாலன் மீதான சில்மிஷ புகார் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் சிவபாலனை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணைக்கு பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கையும், களவுமாக பிடித்த தலைமை ஆசிரியர்
கைது செய்யப்பட்ட பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது ஏற்கனவே மாணவிகள் சிலர் தவறான தொடுதலில் ஈடுபடுவதாக அப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் உடற்கல்வி ஆசிரியர் நடவடிக்கையை அவருக்கு தெரியாமல் தலைமை ஆசிரியர் கண்காணித்து வந்துள்ளார். அப்படித்தான் நேற்றும் விளையாட்டு மைதானத்திற்கு மாணவிகளை அழைத்துச் செல்லும்போது அவருக்கு தெரியாமல் மறைந்திருந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதை தலைமை ஆசிரியரும், மேலும் சில ஆசிரியர்களும் நேரில் பார்த்து அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளனர். அதன் பிறகு தான் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.