பண்ருட்டி, அக். 12: பண்ருட்டியை அடுத்துள்ள கட்டமுத்துபாளையத்தை சேர்ந்தவர் தீனதயாளன். இவரது மகன் வேலன் (18). இவர் நேற்று முன்தினம் இவரது நண்பர்களுடன் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் வீராணம் பாலம் அருகே மணல் எடுத்த 30 அடி ஆழ பள்ளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார். தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சென்று நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று இரண்டாவது நாளாக காலை 6 மணி முதல் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால், ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் தேடுதல் பணியில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடலூரில் இருந்து 2 ரப்பர் படகுகள் கொண்டு வரப்பட்டு தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயகுமார், கோட்டாட்சியர் சுந்தர்ராஜன், டிஎஸ்பி ராஜா, தாசில்தார் பிரகாஷ், காவல் ஆய்வாளர்கள் பாஸ்கரன், அசோகன், நந்தகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் முகாமிட்டு தேடும் பணியை துரிதப்படுத்தினர். இரவு 7 மணி அளவில் மழை பொழிவு ஏற்பட்டதால் தேடும் பணி பாதிக்கப்பட்டது.
+
Advertisement