Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மணலூர்பேட்டை அருகே பரபரப்பு பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் மாணவர்கள் உள்பட 85 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருக்கோவிலூர், செப். 9: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஜம்பை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 190 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் காலை மற்றும் மதிய உணவு மாணவ-மாணவிகளுக்கு வழங்குவது வழக்கம். அதன் பேரில் நேற்று மதியம் வழக்கம்போல் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அதே பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவன் பெரியான் மகன் வல்லரசு (12) என்பவர் மதிய உணவை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனது பாட்டி பூஞ்சோலைக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது பூஞ்சோலை பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து கத்திக்கொண்டு பள்ளிக்கு சென்று உணவில் பல்லி இருந்ததாக கூறியுள்ளார். மேலும் தனக்கு மயக்கம் வருவதாக கூறியதையடுத்து அவர், ஜம்பை அருகே உள்ள மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனை அறிந்த மற்ற மாணவ-மாணவிகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மணலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றதையடுத்து அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் மாணவர்களை அழைத்து வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானப்படுத்தி 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 40 மாணவர்கள், 41 மாணவிகள் மற்றும் 4 பெற்றோர்கள் உள்ளிட்ட 85 பேரை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.