பண்ருட்டி, ஆக. 5: கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேற்கு வன்னியர் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி ராஜம் (69). இவர்களது மகன் கண்ணன் (40). இவர் சம்பவத்தன்று இரவு தாயிடம் தனக்கு சேர வேண்டிய சொத்தை கேட்டு பிரச்னை செய்துள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்ணன் தான் கையில் வைத்திருந்த கத்தியால் ராஜம் தலையில் வலது பக்கத்தில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ராஜம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜத்தின் மகள் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பாசக்கார மகன் கண்ணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
+