Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும் திருமாவளவன் பேட்டி

திண்டிவனம், ஆக. 3: வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனை பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது: பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் போன்ற மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கோறுகிறார்கள். சி.ஏ.ஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் இதனை சோதனை முறையில் மேற்கொள்கிறது என்கிற ஐயம் எழுந்துள்ளது. இதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் மக்கள் அவையிலும், மாநிலங்கள் அவையிலும் இந்த தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்கு தயாராக இல்லை.

அதனால் இரு அவைகளும் தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பிற மாநிலங்களிலும் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாட்டிலும் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை தமிழக வாக்காளர்களையும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற சூழல் உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து தமிழகத்தில் வேலை செய்து வருகின்ற பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் முயற்சி இருப்பதாக தெரிகிறது. பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க கூடிய சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகளை நீக்குவதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்கிற ஐயம் எழுந்துள்ளது. ஆகவே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மூலம் தீர்வை எதிர்பார்க்கும் அதே வேளையில் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் இதற்கு எதிராக போராட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதுகிறோம்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவும், அதன் தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனை எதிர்கொள்வதற்குரிய நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழ்நாட்டிலும் புதிய வாக்காளர் சேர்க்கிறோம் என்கிற பெயரில் வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக தமிழகத்தில் சேர்ந்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப்போகும். எனவே எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் துணிந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது, இவ்வாறு கூறினார்.

தமிழக முதல்வரின் திட்டங்களுக்கு மக்களிடம் வரவேற்பு: அரசியல் காழ்ப்புணர்ச்சி, உள்நோக்கத்துடன் அதிமுக வழக்குதமிழக முதல்வரின் திட்டங்கள் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உள்நோக்கத்துடன் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் ஓட்டலில் தங்கிய விசிக தலைவர் திருமாவளவன் நேற்று காலை சென்னை புறப்படும்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி நிறைவேற்றி வருகிறார். இந்த திட்டங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ைப பெற்றுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டமும் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர் கட்சியினர், குறிப்பாக அதிமுகவினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஸ்டாலின் எனும் பெயர் இடம் பெற்றாலும், இடம் பெறாவிட்டாலும் அவரால் தான் திட்டம் என மக்கள் புரிந்து கொள்ளவார்கள். இதனால் முதல்வருக்கோ, திமுகவுக்கோ பாதிப்பு ஏற்படாது. வழக்கு தொடர்ந்தவரின் மனநிலையை நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள், என்றார்.