Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேஸ்திரி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை வேலூர் கோர்ட் தீர்ப்பு இளம்பெண்ணிடம் பேசிய தகராறு

வேலூர், ஜூலை 30: இளம்பெண்ணிடம் பேசிய தகராறில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது. வேலூர் சைதாப்பேட்டை செரிப் அலி சுபேதார் தெருவை சேர்ந்தவர் குமார்(26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்கிற ராஜேஷ்(35). இருவரும் கட்டிட மேஸ்திரிகள். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வேலை முடிந்து சைதாப்பேட்டையில் உள்ள அங்காளம்மன் கோயில் அருகே இருவரும் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கோயில் அருகே நின்றிருந்த இளம்பெண்ணிடம் குமார் பேசினார். அங்கு வந்த இளம்பெண்ணின் உறவினர் ரவிவர்மா(34) மற்றும் அவரது நண்பரான ராஜேஷ் ஆகியோர், ஏன் எங்களது உறவுக்கார பெண்ணிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்? எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

இதில் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரவிவர்மா தன்னிடம் இருந்த கத்தியால் குமாரின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதனைக்கண்ட ராஜி என்கிற ராஜேஷ், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ரவிவர்மா மற்றும் அவரது நண்பரான ராஜேஷை குத்தினார். அருகில் இருந்தவர்கள் குமாரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் ரவிவர்மா மற்றும் அவரது நண்பரான ராஜேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு வேலூர் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் வாதங்கள் முடிந்து நேற்று நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார். அதில் முதல் குற்றவாளியான ரவிவர்மாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் 2வது குற்றவாளியான ராஜி என்கிற ராஜேஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனையும் விதித்து நிதிபதி தீர்ப்பு கூறினார். இதையடுத்து இருவரையும் போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சிவப்பிரகாசம் ஆஜரானார்.