வேலூர், செப்.25: இந்து சமய அறநிலையத்துறையில் திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மண்டலங்களுக்கு இணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையில் சமீபத்தில் புதிய இணை ஆணையர் மண்டலங்கள், புதிய உதவி ஆணையர் நிலைகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் வேலூர் இணை ஆணையர் மண்டலத்தில் இருந்து திருவள்ளூர் தனி இணை ஆணையர் மண்டலமாக பிரிக்கப்பட்டது. அதேபோல் திருப்பத்தூர் உதவி ஆணையர் நிலை ஏற்படுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி இணை ஆணையர் மண்டலத்தில் இருந்து தருமபுரி புதிய இணை ஆணையர் மண்டலமாக ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் 5 துணை ஆணையர்கள் இணை ஆணையர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 5 இணை ஆணையர்கள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். அதன்படி, விழுப்புரம் இணை ஆணையர் மோகனசுந்தரம், சென்னை மண்டலம்-2க்கும், இங்கு பணியாற்றி வரும் ரேணுகாதேவி புதிதாக ஏற்படுத்தப்பட்ட சென்னை-3 மண்டலத்துக்கும் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அ.ரா.பிரகாஷ், திருவண்ணாமலை இணை ஆணையர் காலி பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் இணை ஆணையர் எஸ்.கிருஷ்ணன், தருமபுரிக்கு முதல் மண்டல இணை ஆணையராக பணியிட மாற்றம் பெற்று பொறுப்பேற்கிறார். இவர் உட்பட 5 பேர் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.