Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்திய 2 கைதிகள் சிக்கினர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கடிதம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது

வேலூர், நவ.19: கோர்ட்டில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது ஆசனவாயில் மறைத்து கஞ்சா கடத்திய 2 கைதிகள் சிக்கினர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருவண்ணாமலை எஸ்பிக்கு நடவடிக்கை பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய விசாரணை, தண்டனை கைதிகள் என்று 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவைகளை சிறை காவலர்கள் சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இதுபோல் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களையும் கைப்பற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கவி பாலாஜி (26), திருவண்ணாமலை புது வானியங்குல 8வது தெருவைச் சேர்ந்த மதன்குமார்(27), அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(31) ஆகிய 3 பேரும் போக்சோ விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு வேலூர் சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது நுழைவாயிலில் இருந்த காவலர்கள், 2 பேரையும் சோதனையிட்டபோது, மதன்குமார் மற்றும் மணிகண்டன் இருவரின் ஆசனவாயிலில் தலா 10 கிராம் கஞ்சா என்று மொத்தம் 20 கிராம் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், கைதி கவி பாலாஜி என்பவரின் நண்பர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பிட கட்டிடத்தில் வைத்து விட்டு சென்றதாகவும், அதனை இருவரும் எடுத்து ஆசனவாயில் வைத்துக் கொண்டு கடத்தியதாக தெரியவந்தது. இதுதொடர்பாக பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் 3 பேரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறைக்கு திரும்பும் கைதிகள் கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. கைதிகள் கஞ்சா கடத்த உதவும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் திருவண்ணாமலை எஸ்பிக்கு சிறை நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.