ஒடுகத்தூர், நவ.19: ஒடுகத்தூர் அருகே தெருநாய் கடித்ததற்கு உரிய சிகிச்சை பெறாமல் இருந்த கூலித்தொழிலாளி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி யமுனா(40). இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 5 மாதத்திற்கு முன்பு சரவணனை தெருநாய் கடித்துள்ளது. அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, அவர் மது போதையில் இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லைஎன கூறப்படுகிறது. பின்னர், மறுநாள் சென்று நாய் கடிக்கு ஊசி செலுத்தி கொண்டுள்ளார். ஆனால், அதன் பிறகு சரவணன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லவில்லையாம். இந்நிலையில், கடந்த சிலநாட்களாக சரவணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மேலும், தண்ணீரை பார்த்தாலே பயந்து குடும்பத்தாரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
நேற்று முன்தினம் சரவணன் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ‘ரேபிஸ்’ நோய்க்கான அறிகுறிகள் இருந்ததால், உரிய முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து, அவரை தீவிரசிகிச்சை பிரிவில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் மற்றும் போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெருநாய் கடித்து சிகிச்சை பெறாமல் இருந்த கூலித்தொழிலாளி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


