ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் கைது விஜிலென்ஸ் போலீசார் நடவடிக்கை வேலூரில் ஓய்வுபெற்ற வனபாதுகாவலர் மனைவியிடம்
வேலூர், அக்.16: வேலூரில் ரூ.2.18 லட்சம் நிலுவை தொகையை விடுவிக்க ஓய்வுபெற்ற வனபாதுகாவலர் மனைவியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளரை விஜிலென்ஸ் போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் வேடல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவர் வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனபாதுகாவலராக பணியாற்றி கடந்த 2022ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு ரூ.2.18 லட்சம் அரியர் மற்றும் சம்பள தொகை நிலுவையில் இருந்துள்ளது. இதற்கிடையில் ஜெயவேல் கடந்த மாதம் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மனைவி வசந்தி(55). தனது கணவருக்கு வர வேண்டிய நிலுவை தொகை குறித்து கேட்க வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தை அணுகி உள்ளார்.
அப்போது அதே அலுவலகத்தில் இ பிரிவில் பணிபுரிந்த இளநிலை உதவியாளர் ஏழுமலை, வசந்தியிடம் நிலுவை தொகை வேண்டும் என்றால் கருவூலத்தில் உள்ள அலுவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும். இதனால் ரூ.10 ஆயிரத்தை கொண்டு வரும்படி தெரிவித்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்தி இதுகுறித்து வேலூர் விஜிலென்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுரைபடி ரூ.10 ஆயிரம் லஞ்சம் பணத்தை நேற்று மாலை அலுவலக்தில் வைத்து இளநிலை உதவியாளர் ஏழுமலையிடம் வசந்தி கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த வேலூர் விஜிலென்ஸ் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான இன்ஸ்பெக்டர் மைதிலி மற்றும் போலீசார் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் வனத்துறை அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.