அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் 9 மணி நேரம் சோதனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு காட்பாடி, வாலாஜாவில் இரிடியம் விற்பனை விவகாரம்
வேலூர், செப்.13: அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரிடியம் விற்பனை விவகாரம் தொடர்பாக 9 மணி நேரம் சோதனை நடத்தினர். மேலும் அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இரிடியம், ஹவாலா பணம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் நேற்று 80க்கும் மேற்பட்ட இடங்களில் திடீரென சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையை சேர்ந்தவர் ஜெயகரன் என்கிற ஜெயராஜ்(54). இவர் அரசு மற்றும் தனியார் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் இரிடியம் விற்பனை செய்வதாக புகார் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று காலை 6 மணிக்கு சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த சிபிசிஐடி போலீசார் 5க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் காட்பாடியில் உள்ள ஜெயராஜுக்கு சொந்தமான சொகுசு பங்களாவிற்கு சென்றனர். பின்னர் கதவுகளை தாழிட்டுவிட்டு சோதனையை தொடங்கினர். ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீட்டில் இருந்த ஜெயராஜிடம் விசாரணை நடத்தினர்.
காலை 6 மணி முதல் தொடர்ந்து மாலை 3.30 மணி வரை சோதனை நடைபெற்றது. மொத்தம் 9.30 மணி நேரம் நடந்த சோதனை மற்றும் விசாரணையில் அவர் அளித்த தகவல்களை போலீசார் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து விசாரணைக்காக ஜெயராஜை அழைத்துக் கொண்டு சிபிசிசிஐடி போலீசார் சென்னைக்கு கார்களில் புறப்பட்டு சென்றனர்.
இந்த விசாரணையை தொடர்ந்து, இரிடியம் விவகாரத்தில் சென்னை சிபிசிஐடி காட்பாடியில் கிடைத்த தகவலின்பேரில், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த படியம்பாக்கம் கிராமத்தில் உள்ள மூர்த்தி என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இவர் வாலாஜா ஒன்றிய அதிமுக அவைத்தலைவர் பொறுப்பில் உள்ளார். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் ஒன்றிய குழு துணைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மூன்று பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் மாற்று உடையில் வந்து அதிரடியாக மூர்த்தி வீட்டில் நுழைந்து அவரிடம் விசாரணை நடத்தி 3 மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதிமுக பிரமுகர் மூர்த்தியை விசாரணைக்காக காரில் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். காட்பாடி, வாலாஜாவில் இரிடியம் விற்பனை தொடர்பான நடந்த சோதனை அப்பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
