Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தவறியவர்களுக்கு தேர்வு உண்டு கல்வித்துறை அதிகாரிகள் தகவல் கடந்த கல்வி ஆண்டுகளில்

வேலூர், ஆக.13: கடந்த கல்வியாண்டுகளில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாநில கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது பொருந்தாது என்றும், அவர்கள் தேர்ச்சி பெறும் வரை அவர்களுக்கு தனியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டுக்கு முன்பு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனால் பெரும்பாலான பள்ளிகள், பிளஸ் 1 வகுப்புக்கு முக்கியத்துவம் தராமல், அதற்கான பாடங்களை பெயரளவுக்கு நடத்தி விட்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனால், உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில், மாணவ, மாணவியரால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியவில்லை என்ற தகவல் வெளியானது. இச்சிக்கலுக்கு தீர்வு காண, 2017-2018ம் கல்வியாண்டில் இருந்து பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை கடந்த 2024-25ம் கல்வியாண்டில் 8 லட்சத்து 7,098 பேர் எழுதினர். இத்தேர்வில் துணைத்தேர்வு எழுதியவர்கள் உட்பட 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 63,866 பேர் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்கான துணைத்தேர்வு, கடந்த மாதம் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிவுகள் கடந்த 31ம் தேதி வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட மாநில கல்விக்கொள்கையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே இனி பொதுத்தேர்வு நடத்தப்படும். பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாது. இந்த நடைமுறை நடப்பு 2025-26ம் கல்வியாண்டே அமலுக்கு வரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 2024-24 மற்றும் அதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்தது. தற்போது கடந்த கல்வி ஆண்டுகளில் பிளஸ்1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு பொதுத்தேர்வு அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாநில கல்விக்கொள்கை என்பது நடப்பு 2025-26ம் கல்வி முதல்தான் நடைமுறைக்கு வருகிறது. எனவே, வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வு என்பது 10 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மட்டும்தான் நடைபெறும். இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது. கடந்த கல்வியாண்டுகளில், பிளஸ் 1 தேர்வில், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு, அவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு நடத்தப்படும். இது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்களுடன் விரைவில் அரசு உத்தரவு வெளியாகும்’ என்றனர்.