Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆடுகளின் வரத்து குறைந்து ரூ.13 லட்சத்திற்கு வர்த்தகம் புரட்டாசி மாதம், தொடர் மழை எதிரொலி ஒடுகத்தூர் வாரச்சந்தையில்

ஒடுகத்தூர், அக்.11: ஒடுகத்தூர் வாரச்சந்தையில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் மழையால் நேற்று ஆடுகள் வரத்து குறைந்து ரூ.13 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடந்து வருகிறது. இந்த சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு வாரந்தோறும் ரூ.30 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. ஆனால், புரட்டாசி மாதத்தில் ஆடுகளின் வரத்து குறைவாக இருப்பதுடன், விற்பனையும் மந்தமாகவே இருக்கும்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று வழக்கம்போல் ஆட்டுச்சந்தை கூடியது. புரட்டாசி மாதம் எதிரொலியாக கடந்த வாரங்களை விட இந்த வாரம் ஆடுகளின் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதனால் ஆடுகளின் விலையும் குறைந்து ஒரு ஜோடி ரூ.20 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், `ஒடுகத்தூர் சந்தையில் ஆடி, ஆவணி மாதங்களில் ஆடுகளின் வரத்து அதிகரித்து வியாபாரமும் நன்றாக இருக்கும்.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகளின் வரத்து குறைந்துள்ளது. இம்மாதம் முடியும் வரை இதே நிலை தான் நீடிக்கும். மேலும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியூர்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் வியாபாரமும் மந்தமாகவே இருந்தது. இதனால் இன்று(நேற்று) நடந்த சந்தையில் ஒட்டு மொத்தமாக ரூ.13 லட்சத்துக்கும் குறைவாக தான் ஆடுகள் விற்பனை நடந்தது என்றனர்.