கே.வி.குப்பம்,செப்.9: கே.வி.குப்பம் ஆட்டுசந்தையில் தொடர்ந்து விற்பனை மந்தமாக நடைபெற்றது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்தது. வாங்குவோர் விரும்புகிற இன ஆடுகள், திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமில்லாமல், விற்போருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால்தான், ஆடு வியாபாரிகள் அதிகளவில் இங்குக் கூடுகிறார்கள். கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் பிரிதி வாரம் திங்கள்கிழமை இயங்கி வருகிறது இந்த ஆட்டுச்சந்தை. இந்நிலையில் கடந்த மாதங்களில் நடைபெற்ற சந்தைகளில் எதிர்பார்த்ததுபோல் நல்ல லாபம் கிடைத்ததாக ஆடு வளர்ப்பவர்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து திங்கட்கிழமையான நேற்று காலை வழக்கம்போல சந்தை கூடியது. ஆனால் கடந்த மாதங்களை போலவே நேற்று நடைபெற்ற சந்தையில் ஆடுகள் வரத்து குறைவாக இருந்தது. அதுமட்டுமின்றி வியாபாரிகள் குறைந்த அளவிலேயே கூடியிருந்தனர். காட்பாடி, குடியாத்தம், பரதராமி, ஒடுகத்தூர், உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். மேலும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்தும் ஆடுகள் கொண்டுவந்தனர். ஆடுகள் வரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தொடர்ந்து வியாபாரம் மந்தமாக நடைபெற்றதால் வியாபாரிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
+
Advertisement