Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிக லாபம் ஆசைகாட்டி ஐடி ஊழியரிடம் ரூ.51.37 லட்சம் மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை பங்கு சந்தையில் முதலீடு எனக்கூறி

வேலூர் செப்.9: பங்கு சந்தையில் முதலீடு எனக்கூறி அதிக லாபம் ஆசைகாட்டி ஐடி ஊழியரிடம் ரூ.51.37 லட்சம் மோசடி தொடர்பாக வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள், வாட்ஸ்ஆப், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் வரும் தகவல்களை நம்பி படித்த பட்டதாரிகள் முதல் இல்லத்தரசிகள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். சைபர் குற்றங்கள் தொடர்பாக போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சைபர் குற்றங்கள் குறைந்தபாடில்லை. வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 47 வயது ஐடி ஊழியர். இவர் சமூக வலைதள பக்கத்தில் பங்கு சந்தை முதலீடு தொடர்பாக வீடியோ பார்த்துள்ளார். பின்னர், அப்பகுதியில் உள்ள வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்துள்ளார். அந்த குரூப்பில் பங்கு சந்தை முதலீடு செய்வது தொடர்பாக, பெறப்பட்ட லாபம் குறித்து அந்த குரூப்பில் இருந்தவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அதிக லாபம் கிடைக்கும் என நம்பி, ஐடி ஊழியரும் கடந்த ஜூலை 18ம் தேதி முதல் நேற்று வரை பங்கு சந்தையில் முதலீடு என பல்வேறு தவணையில் 52 நாட்களில் ரூ.51 லட்சத்து 37 ஆயிரத்து 725 பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர், ஐடி ஊழியர்களின் டிரேடிங் அக்கவுண்ட்டில் சுமார் ரூ.1 கோடி பணம் இருப்பு உள்ளதாக கணக்கு காண்பித்துள்ளது. பின்னர், அந்த டிரேடிங் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, இன்னும் அதிக பணத்தை முதலீடு செய்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஐடி ஊழியர் விசாரித்தபோது, டிரேடிங் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, ஐடி ஊழியர் சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வேலூர் எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘சமூக வலைதளங்களில் வரும் பங்குச்சந்தை முதலீடு, பகுதி நேர வேலை போன்ற மோசடி விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலர் இந்த மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதில் படித்தவர்களே அதிகம் என்பதுதான் வேதனை. எனவே மோசடி விளம்பரங்களை நம்பாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றனர்.