வேலூர், ஆக.8: காட்பாடி அருகே ஆசைக்கு இளம்பெண்ணின் வீட்டை தீவைத்து கொளுத்தியவரை போலீசார் கைது செய்தனர். காட்பாடியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி, தற்போது கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாணிக்கம்(25). இவர் இளம்பெண்ணிடம் நட்பு அடிப்படையில் பேசி வந்துள்ளார். இதற்கிடையில் இளம்பெண்ணிடம், மாணிக்கம் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து எச்சரித்துள்ளார். தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த மாணிக்கம், கடந்த 5ம் தேதி இளம்பெண்ணின் வீட்டை தீ வைத்து கொளுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்தபெண் நேற்று முன்தினம் விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement