வரி வசூலுக்கு சென்ற ஊராட்சி செயலரை சரமாரி தாக்கிய போதை ஆசாமி சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஒடுகத்தூர் அடுத்த குருவராஜாபாளையத்தில்
ஒடுகத்தூர், டிச.7: ஒடுகத்தூர் அடுத்த குருவராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவன்(38), இவர் அதே கிராமத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். அதேபோல் அதே கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார்(46), இவர் கேபிள் டிவி மற்றும் சுப விஷேசங்தளுக்கு பந்தல் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று குருவராஜாபாளையம் ஊராட்சியில் துணை பிடிஓ மனோகரன் தலைமையில் ஆசனாம்பட்டு, அகரம், குப்பம்பட்டு, குப்பம் பாளையம் ஆகிய பல்வேறு ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலர்கள் கொண்ட குழுவினர் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதனால் நேற்று குருவராஜாபாளையம் ஊராட்சி முழுவதும் வீடு வீடாக சென்று வீட்டு வரியை வசூல் செய்தனர். அதேபோல், பிள்ளையார் கோயில் தெருவில் அதிகாரிகள் வீட்டு வரி வசூல் செய்து கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு மது போதையில் வந்த சிவகுமார் வரி வசூலுக்கு வந்த அரசு அதிகாரகளிடம் ‘எங்கள் பகுதிக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை எதற்கு நாங்கள் வரி செலுத்த வேண்டும் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த ஊராட்சி செயலர் கேசவன் சிவகுமாரிடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசி கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சிவகுமார் மது போதையில் கேசவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுத்து முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து, துணை பிடிஓ மனோகரன், ஊராட்சி செயலர் கேசவன் ஆகியோர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார், அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது, அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே வரி வசூலுக்கு சென்ற ஊராட்சி செயலரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


