அணைக்கட்டு, டிச.5: அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட 104 அரசு பள்ளிகளுக்கு புதிய காஸ் அடுப்பை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வழங்கினார். அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் நிதி உதவிபள்ளி, வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்குவதற்கு சமூக நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காஸ் அடுப்புகளை பள்ளி சத்துணவு அமைப்பாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் வினோத்குமார், செல்வகுமார் வரவேற்றனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், குமரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள 104 அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக காஸ் அடுப்புகளை சத்துணவு அமைப்பாளர்களிடம் வழங்கினார். அப்போது எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கூறுகையில், ‘மேல்அரசம்பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தேன், அப்போது விறகு அடுப்பு மூலம் சமைப்பது தெரியவந்தது. இதையடுத்து ஒன்றியம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விறகு அடுப்பு மூலம் சமைக்கிறார்கள் என கணக்கெடுப்பு செய்து, விறகு அடுப்பு மூலம் சமைக்கும் பள்ளிகளுக்கு கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது என்றார். அப்போது துணை பிடிஓ (சத்துணவு) பூங்கோதை, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமேனன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரகாஷ், குமார், கணபதி, கணேசன், ரமேஷ், கோபி, பாஸ்கர், நியமன உறுப்பினர் முருகேசன், சுப்புராயன், ஒன்றிய துணை செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி அஸ்லாம், ஊராட்சி தலைவர்கள் திலகவதி சாரதி, செந்தில்குமார், திமுக இளைஞரணி அமைப்பாளர் புருஷோத்தமன், மாணவர் அணி அமைப்பாளர் ஹரிபிரசாத் மற்றும் பலர் உடனிருந்தனர்.

