Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.75 லட்சத்துக்கு வர்த்தகம்

வேலூர், நவ.5: பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ஒட்டுமொத்தமாக ரூ.75 லட்சத்துக்கு நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணா மலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அப்போதைய சூழலுக்கு ஏற்ப நடைபெறும். கடந்த வாரங்களில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் வந்ததால் விற்பனையும் ரூ.60 முதல் 70 லட்சம் வரையே இருந்தது. இது கடந்த வாரம் திடீரென மாறியது.

அன்றைய தினம் சந்தைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள், கோழிகள் என கால்நடைகள் குவிந்து சந்தை களைக்கட்டியது. இந்த வாரம் சற்று கூடி, 1000க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இவற்றுடன் கால்நடைகள் உட்பட பிற கால்நடைகளுக்கு தேவைப்படும் பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் சேர்ந்து வர்த்தகம் ரூ.75 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவனம் தட்டுப்பாடு இல்லை. இதனால் மாடுகள் வரத்து சற்று குறைவாகவே உள்ளது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வந்தது. இவைகளின் விலை சற்று அதிகமாக உள்ளது. விற்பனையும் ரூ.75 லட்சத்துக்கு நடந்தது. விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்றனர்.