கால் தவறி விழுந்துதான் யானை இறந்தது உடற்கூறு ஆய்வில் கால்நடை மருத்துவர்கள் தகவல் பேரணாம்பட்டு அருகே காப்புகாட்டு ஓடையில்
பேரணாம்பட்டு, டிச.2: பேரணாம்பட்டு அருகே காப்புகாட்டு ஓடையில் யானை கால் தவறி விழுந்துதான் இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டலபல்லி காப்பு காடு அமைந்துள்ளது. இந்த காப்புக்காடுக்கு உட்பட்ட டி.டி.மோட்டூர் அடுத்த சிந்தகனவாய் பகுதியை ஒட்டிய வனப்பகுதியின் உள்ளே தண்ணீர் ஓடை செல்கிறது. நேற்றுமுன்தினம் மாலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு யானை ஒன்று தண்ணீரில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பேரணாம்பட்டு வனச்சரகர் ரகுபதிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர், வனவர்கள் மற்றும் கார்டுகள் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் அசோக் குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் தமிழ்நாடு வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன் யானையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, உடற்கூறு ஆய்வு முடிந்ததும் இது குறித்து வேலூர் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில், 7 வயதுடைய ஒற்றை ஆண் யானையானது தண்ணீர் தேடி வந்தபோது இங்குள்ள ஓடையில் கால் தவறி கீழே விழுந்துள்ளது. அப்போது அதன் தும்பிக்கையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து உள்ளது என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த யானையின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தி காட்டில் உள்ள வன விலங்குகளுக்கு உணவுக்காக அப்படியே விட்டு விடுவோம்’ என்றார். வனப்பகுதியில் வனத்துறையினர் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபடாததால் வனவிலங்குகள் உயிரிழந்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

