கே.வி.குப்பம், ஜூலை 29: ஆடி திருவிழாக்கள் முன்னிட்டு கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் வியாபாரம் சூடு பிடித்தது. இதில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று ஆட்டுச்சந்தை நடப்பது வழக்கம். இந்நிலையில் திங்கட்கிழமையான நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் லோடு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. ஆடி மாதம் என்பதால் கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடுகளை பலியிட்டு நேர்த்திகடனாக செலுத்துவதற்காக அதிகமானோர் வாங்கி சென்றனர். இதனால் ஆடுகளின் வரத்து அதிகம் காணப்பட்டது.
இதில் ஏராளமான வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். ஆடுகளின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்பட்டது. வெள்ளாடுகள், கிடாய்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள், என ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் கொண்டுவரப்பட்டிருந்தது. கடந்த வாரங்களில் நடைபெற்ற சந்தைகளில் வியாபாரம் டல் ஆனதை தொடர்ந்து தற்போது, திருவிழா சீசன் என்பதால், ஆடுகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வரும் வாரங்களில் ஆடுகள் வியாபாரம் கணிசமாக உயரும் என்றும் இதேபோன்று வருகின்ற வாரங்களில் கூடுதலாக வியாபாரம் களை கட்டும் என்று எதிர்பார்ப்பில் இருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.