ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பங்குசந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.28.90 லட்சம் மோசடி; வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார்
வேலூர் செப்.2: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பங்குசந்தையில் முதலீடு செய்வதாக கூறி ரூ.28.90 லட்சம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வேலூரைச் சேர்ந்த ஒருவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கனூர் கிராமம் பகுதியைச் சேர்ந்த எனது கல்லூரி நண்பர். கடந்த ஜனவரி மாதம் அவர் பங்கு சந்தையில் தொழில் செய்து வருவதாகவும் அதன் மூலம் நல்லா லாபம் கிடைப்பதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார். தொழில் வளர்ச்சிக்காக என்னிடம் பணம் கேட்டிருந்தார். பங்கு சந்தை ஏற்ற இறக்கம் உள்ளது என்பதால் நான் பணம் தர தயங்கினேன்.
ஆனால் முதலீடாக இல்லாமல் கொடுத்த பணத்திற்கு நிலையான வட்டி கொடுப்பதாக கூறினார். என்னிடம் பணம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர் உன் பெயரில் நான் வங்கியில் கடன் பெற்று அதற்கு சரியான முறையில் மாதத்தவணை செலுத்தி விடுகிேறன் என்று என்னிடம் கூறினார். அதன்படி அவரது அலுவலகத்திற்கு சென்றேன். வங்கியில் கடன் பெறுவதற்கான வழிமுறைகளை செய்து வங்கியில் ரூ.28.90 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்தார். எனது வங்கி கணக்கிற்கு பணம் வந்ததும், எனது நண்பரின் வங்கிக்கு பணப்பரிமாற்றம் செய்தேன்.
சில மாதங்கள் சரியாக பணம் செலுத்திய நபர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பணத்தை திருப்பி தரவில்லை. அவர் எங்கோ தலைமறைவாகிவிட்டார். இதனால் மாத தவணை செலுத்த முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறேன். வங்கியில் கடன் வாங்க வைத்து என்னை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த அதிகாரிகள் அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.