திருவெறும்பூர், அக்.30: திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங் குடியில் நடவு செய்து 20 நாட்களே ஆன சம்பா நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் செய்வதறியாது புலம்பி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடியில் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி தொடங்கி தற்பொழுது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நடவு செய்து 20 நாட்கள் ஆன நெற்பயிர்கள் முளையிலேயே கருகி வருகிறது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் இதுவரை வந்து பார்க்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து திருவெறும்பூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுகன்யாவிடம் கேட்டபோது, அதுபோல் எந்த வித தகவலும் தங்களுக்கு வரவில்லை, தங்களது அலுவலர்கள் அங்கு சென்று வருவதாகவும், ஆனால் எந்த தகவலும் இல்லை.
இருந்தாலும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பாதிப்படைந்த விளை நிலங்களை பார்வையிட்டு பயிர் செய்யப்பட்டுள்ள நெல் ரகம் என்ன என்பதையும், பாதிப்புக்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தேவைப்பட்டால் அறிவியல் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட நிலத்தை ஆய்வு செய்து பயிர் கருகுவதற்கு உரிய காரணத்தை கண்டறிந்து அதற்கு உரிய தீர்வுகளை கூறி இப்பிரச்னையை தீர்க்கப்படும் என்றார்.
