துவரங்குறிச்சி, செப்.25: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வனத்துறை சார்பில் துவரங்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட நாவல் மர கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் துவரங்குறிச்சி திமுக நகரச் செயலாளர் நாகராஜ், மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அபுதாகிர், அம்மையப்பன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் வளாகத்தை சுற்றிலும் நாவல் மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் விட்டனர். அதை தொடர்ந்து வனச்சரக அலுவலர் சரவணகுமார் பள்ளி மாணவர்களிடம் மரம் வளர்ப்பது நாளைய சந்ததிகளின் எதிர்காலத்தை எவ்வகையில் காக்கும் என்றும், இதனால் எவ்வளவு பயன்கள் கிடைக்கும் என்றும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் வனவர் பெரியசாமி, வனக்காப்பாளர்கள், வன காவலர்கள் கலந்து கொண்டனர்.