திருச்சி, நவ.18: திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுநர்களுக்கு தனியார் துறைகளில் வேலை பெற்றுத்தரும் பணியமா்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை உட்பட பல்வேறு தனியார் துறைகளை சார்ந்த 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனர். மேலும், திருச்சி மாவட்டத்திலுள்ள திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தோ்வு செய்யவுள்ளனர். இத்தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ் 2, ஐ.டி.ஐ, இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பொறியியல் படிப்புகள் ஆகிய கல்வித்தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில், ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலை நாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலை வாய்ப்பை பெற இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால், திருச்சி மாவட்ட வேலை நாடுநர்கள் வரும் 21ம்தேதி காலை 10.30 மணி முதல் திருச்சி, கண்டோன்மென்ட், பாரதிதாசன் சாலை, மேற்கு தாலுகா அலுவலகத்தின் பின்புறமுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து முகாமில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த மேலும், தகவல்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55902 என்ற தொலைபேசி, அலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.


