திருவெறும்பூர், செப்.18: பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவெறும்பூரில் ரூ.2க்கு டீ விற்கப்பட்டதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி பருகினர்.தமிழக முழுவதும் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் நகர செயலாளர் சிவானந்தன் என்பவர் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தனது கடையில் டீ குடிக்க வரும் அனைவருக்கும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை டீ கட்டணம் இரண்டு மட்டுமே பெற்றுக் கொண்டு டீ வழங்கினார்.பால், சர்க்கரை உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை உயர்ந்துள்ள காலகட்டத்தில் சிவானந்தன் தந்தை பெரியார் மீது கொண்ட ஈடுபாட்டால் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் இரண்டு ரூபாய்க்கு டீ வழங்கிய சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.