திருச்சி,அக்.25: திருச்சி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது என மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையின் புகார் எண். 8300113000 மற்றும் 0431-3524200 ஆகிய எண்களில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்படும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம். தற்போது 5 மண்டங்களிலும் மழைநீரை வெளியேற்றவதற்காக 20HP ஆயில் மோட்டார், மின் மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் கழிவு நீர் அகற்றுவதற்கான வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 12 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது கண்டறியப்பட்டு, மாநகராட்சி பணியாளர்கள் மூலம் மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. வெள்ள நிவாரண முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மழைநீரால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்காக மாநகராட்சி பகுதிகளில் 22 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையிலுள்ளது.
மேலும், திருச்சி மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கும் பணிக்காக மண்டலத்திற்கு தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் சீரமைக்கும் பணிகள்
துவங்கி நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சியிலுள்ள 159.615 கீ.மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் ரூ.2.36 கோடி மதிப்பில் போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகிறது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ள மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் மேலும் கூறுகையில், வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்படும் பகுதியை சேர்ந்த மக்கள் உடனடியாக மாநகராட்சியின் அவசர கட்டுப்பாட்டு எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
