மணப்பாறை, நவ.11: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே முன்னாள் சென்ற மினி சரக்கு வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் பெரிய அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் அந்தோனி(50). விவசாயி. அந்தோனி தனது உறவினர் வீட்டில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்காக, தனது டூவீலர் நேற்று தனது மனைவி குழந்தைதெரசுவுடன் மணப்பாறை நோக்கி சென்றார். இருசக்கர வாகனம் திருச்சி- திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில், கரட்டுப்பட்டி அருகில் சென்றுகொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற மினி சரக்கு வேன் திடீரென திரும்பிது, அப்போது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் வேன் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அந்தோனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி குழந்தைதெரசு, தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வையம்பட்டி போலீசார், அந்தோனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வேன் ஓட்டுனரான குதிரைகுத்திப்பட்டியை சேர்ந்த சின்னப்பன் மகன் சரவணபெருமாள் (22) மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
