Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு: தேர்தல் பொதுப்பார்வையாளர் தலைமையில் நடந்தது

விருதுநகர், ஏப்.10: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவின் போது பணியாற்ற உள்ள தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர் நீலம் நம்தேவ் எக்கா தலைமையில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் 1,895 வாக்குச்சாவடிகளில் 145 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. 145 வாக்குச்சாவடிகளை 145 நுண்பார்வையாளர்கள் நேரடியாக கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அந்த வகையில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 15 தேர்தல் நுண்பார்வையாளர்கள், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 7 நுண்பார்வையாளர்கள், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 19 நுண்பார்வையாளர்கள், சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 28 நுண்பார்வையாளர்கள், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 16 நுண்பார்வையாளர்கள், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 நுண்பார்வையாளர்கள், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 38 நுண்பார்வையாளர்கள் என 145 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நுண்பார்வையாளர்களாக வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்கள், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு வாக்குப்பதிவு அலுவலர்களால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அறிந்து, முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தேர்தல் பொதுப்பார்வையாளரிடம் நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.

குறிப்பாக வாக்குப்பதிவு நாளில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை சந்தேகமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை முறையாக கண்காணித்து சம்பந்தப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச்செல்வம், வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர்.