ஊட்டி, ஜூலை 15: ஊட்டியில் சுற்றுலா தலங்களில் சுற்றுலா துறை சார்பில் முன்னாள் ராணுவத்தினர் டூரிஸ்ட் வார்டன்களாக பணியமர்த்தப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு உதவி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற மலைவாச தலமாக உள்ளது. இங்கு நிலவும் குளுகுளு காலநிலையை அனுபவிக்க ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவு வருகை புரிகின்றனர். ஊட்டி வரக்கூடிய சுற்றுலா பயணிகள் நகரில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைக்காரா, அவலாஞ்சி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று பார்வையிட்டு மகிழ்கின்றனர்.