களக்காடு, ஜூலை 30: திருக்குறுங்குடி அருகே வன்னியன்குடியிருப்பைச் சேர்ந்தவர் வள்ளிமுருகன் (38). பெயிண்டரான இவர் தளவாய்புரத்தில் உள்ள தனது சகோதரி நடத்தி வரும் ஓட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது, அங்கு நின்ற தளவாய்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டியன் மகன் சுதர்சன் என்ற சுரேஷ், நம்பிதலைவன் பட்டயம் சிவபெருமாள் என்ற சிவா, இசக்கிமுத்து என்ற பாண்டி மகன் இசக்கிராஜா என்ற ராசு ஆகியோர் வள்ளிமுருகனை மிரட்டினர். அவர்களிடம் வள்ளிமுருகன் தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சுதர்சன் உள்பட மூவரும் சேர்ந்து வள்ளிமுருகனை தாக்கியதுடன் சட்டை பையில் இருந்த ரூ.1,300யையும் பறித்துள்ளனர். மேலும் அவரது செல்போனையும் பறித்து உடைத்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த வள்ளிமுருகன் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுதர்சன் என்ற சுரேஷ் உள்பட மூவரையும் தேடி வருகின்றனர்.
+
Advertisement