வந்தவாசி, நவ. 25: சென்னையில் காதலிக்கு வேறுவொருவருடன் திருமணம் நடந்ததால், காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பீட்டர் மகன் யோவன்சீலன்(21). இவர் சென்னையில் லோடு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வந்தார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்த யோவான் சீலன் நேற்று முன்தினம் வழக்கம் போல் தனது வீட்டுக்கு வந்தாராம். அப்போது சென்னையில் காதலித்த பெண்ணிற்கு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த யோவான் சீலன் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். இருந்த போதிலும் யோவான் பலியானதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்த கீழ் கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவரது தாய் கிரேசி கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



