திருவண்ணாமலை, செப். 24: திருவண்ணாமலை மாநகராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். அரசுத்துறைகளின் திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு எளதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, உங்களுடன் ஸ்டாலின் எனும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த ஜூலை 15ம் தேதி முதல் நகர பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி, நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்பகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட கிரிவலப்பாதையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. அதில், நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, சமூக நலத்தறை உள்ளிட்ட 13 துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு, ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அரங்கு அமைத்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை, கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார். துறைவாரியாக பெறப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய கணினி ஒப்புகை ரசீது வழங்க வேண்டும் என்றார். அதேபோல், மனுக்களுடன் தேவையான இணைப்பு ஆவணங்கள் உள்ளதா என சரிபார்த்து மனுக்களை பெற வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது, ஆர்டிஓ ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.