அதிமுக மாஜி கவுன்சிலர் வீட்டில் 106 செம்மரக்கட்டைகள் பறிமுதல் தப்பி ஓடியவர்களுக்கு வலை கண்ணமங்கலம் அருகே அதிரடி சோதனை
கண்ணமங்கலம், நவ.19: முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வீட்டு பாத்ரூமில் பதுக்கி வைத்திருந்த 106 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த மேல்நகரை சேர்ந்தவர் ஆரணி அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி. இவர் தற்போது தனது மகள் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி வீட்டில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிைடத்தது.
அதனடிப்படையில், நேற்று கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, எஸ்எஸ்ஐ திருமால், தனிப்பிரிவு காவலர் சிவகுமார் மற்றும் போலீசாருடன் ஒசிஐயூ உளவுத்துறையினர் மேல்நகரில் உள்ள ரவி வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில், வீட்டு பாத்ரூமில் 2 டன் எடைகொண்ட 106 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.1.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஆரணி வனச்சரக வனவர் பவுனிடம் மேல்நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரவி வீட்டில், செம்மரக்கட்டைகளை பதுக்கிய அவரது அண்ணன் மகன் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே ரமேஷ் மீது ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தியது தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. அதனடிப்படையில் போலீசார் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது?, மேலும் முக்கிய புள்ளிகளுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


