வந்தவாசி, செப். 19: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபுகான் மகன் ரகமத்துல்லா(28). அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் மகள் பிரியதர்ஷினி. இருவரும் 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சரவணன் தனது குடும்பத்தினருடன் செய்யாறில் வசித்து வருகிறார். நல்லூரில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டும் பணியை சரவணன் செய்து வருகிறாராம். இதனால் தனது மகள் வீட்டில் சரவணன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சரவணனுக்கும் ரஹமத்துல்லாவிற்கும் குடும்ப தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ரஹ்மத்துல்லாஹ் சரவணனை தாக்கினாராம். இதனை அறிந்த சரவணன் மகன் பிரியதர்ஷன்(22) செய்யாறில் இருந்து பைக்கில் வந்து ரஹ்மத்துல்லாவை கட்டையால் சரமாரியாக தாக்கினாராம். இதில் மண்டை உடைந்த ரஹ்மத்துல்லாஹ்வை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவரது தாத்தா ரஜாக் தெள்ளார் போலீசில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷனை கைது செய்தார்.