ஆரணி, அக்.14: ஆரணி அருகே கன மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலியானார். 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த சந்தவாசல் புஷ்பகிரி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(80). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி அடுத்த அரையாளம் கிராமத்தில் உள்ள அவரது மகள் அலமேலு வீட்டிற்கு வந்து, அருகிலுள்ள அலமேலுவின் பழைய ஓட்டு வீட்டில் தங்கி இருந்தார். நேற்று மதியம் அலமேலுவின் மகன்கள் திவாகர்(8), கவினேஷ்(5) ஆகிய இருவரும் ஓட்டு வீட்டிற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவும் அப்பகுதியில் கனமழை பெய்தது. இதில் பக்கத்தில் இருந்த உறவினரது ஓட்டு வீட்டின் சுவர் பாதிப்படைந்திருந்துள்ளது. நேற்று காலை அந்த வீட்டின் ஒருபக்க சுவர் திடீரென இடிந்து, முதியவர் துரைசாமி தங்கியிருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் துரைசாமி தங்கியிருந்த வீட்டின் சுவரும் இடிந்தும் அவர் இடிபாடுகளில் சிக்கினார். அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவரது பேரக்குழந்தைகள் திவாகர், கவினேஷ் ஆகியோரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்து கதறி கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு வந்து சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவர்கள் இருவரையும் மீட்டனர். மேலும் முதியவர் துரைசாமியை மீட்டபோது, ஏற்கனவே இறந்துகிடந்தார். பின்னர் குழந்தைகளை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் துரைசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் துரைசாமியின் மகள் அலமேலு(40) கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழையால் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.