செய்யாறு, நவ.12: செய்யாறு அருகே கடந்த மாதம் நடந்த சென்ட்ரிங் தொழிலாளி கொலை வழக்கில் 3 வாலிபர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த களக்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் கபாலி(25), சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 20ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அப்துல்லாபுரம் கிராம எல்லையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து மது குடித்தார். அப்போது, கபாலி மதுபோதையில் அங்கிருந்த வாலிபர்கள் சிலரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் ஒன்று சேர்ந்து கபாலியை சரமாரியாக அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். டாஸ்மாக் கடை அருகே நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கபாலி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தொழிலாளியை வெட்டிக்கொன்ற கொலையாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த கொலை சம்பவம் நடந்த 20 நாட்கள் ஆன நிலையில் சந்தேகத்தின்பேரில் தூசி கிராமம் பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ் மகன் பாலாஜி(20), பிராமணர் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் பாபு(20), பெருமாள் மகன் யுவராஜ்(27) ஆகிய 3 பேரை நேற்று தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். கபாலியை கொலை செய்ததற்கு குடிபோதை தகராறு தான் காரணமா அல்லது முன்விரோதம் ஏதாவது உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
