செய்யாறு, அக்.12: செய்யாறு அருகே வெம்பாக்கம் ஒன்றியத்தில் வெங்களத்தூர் கிராமத்தில் நேற்று நடந்த கிராம சபா கூட்டத்தில் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு மனம் மகிழ்ந்து நெகிழ்ச்சியுடன் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். காந்தி ஜெயந்தியை ஒட்டி நேற்று கிராம சபா கூட்டம் தமிழக முழுவதும் நடந்தது. அதன்படி செய்யாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியத்தில் வெங்களத்தூரில் நடந்த கிராம சபா கூட்டத்திற்கு தாசில்தார் தமிழ்மணி தலைமை தாங்கினார். பிடிஓக்கள் குப்புசாமி, இந்திராணி, வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜே.சி.கே.சீனிவாசன், செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று மக்களுக்கான ஆட்சியை நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் நாடித்துடிப்பை பார்த்து அவர்களின் தேவைகளை உணர்ந்து தினம் தினம் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இந்த அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது கூட்டத்தில் மகளிர்களில் சிலர் எழுந்து விடியல் பயணத்திற்காக தினமும் நகரப் பேருந்தில் சென்று வருவதால் மாதம் ரூ.2500 முதல் ரூ.3000 சேமிக்கின்றோம் என்றனர். சில பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் உரிமைத் தொகையாக வழங்குவது எங்களுக்கு பேருதவியாக இருக்கிறது எங்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று எம்எல்ஏ ஜோதியிடம் குறிப்பிட்டனர்.
அப்போது விவசாயி ஒருவர், வளர்ச்சி பணி மேற்கொண்டு வரலாற்று சாதனைகளை முன்னெடுத்து பாடுபட்ட செய்யாறு எம்எல்ஏ ஜோதிக்கும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசனுக்கும் ஒட்டுமொத்த கிராம மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர். நிகழ்ச்சியில் கிராம வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து தீர்மானங்களும் வரவு செலவு கணக்குகளும் வாசிக்கப்பட்டன. கூட்டத்தில் திமுக பிரமுகர்கள் கருணாகரன், சிட்டிபாபு, பெருமாள், சிவபிரகாசம், சேகர், ராதாகிருஷ்ணன், அய்யாதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெங்களத்தூரில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட சிறு பாலத்தை எம்எல்ஏ ஒ.ஜோதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அதேபோல் சேத்துப்பட்டு தாலுகா, பெரணமல்லூர் ஒன்றியம், கங்காபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.