தீபத்திருவிழா தெப்பல் உற்சவம் நிறைவு அலங்கார ரூபத்தில் சுப்பிரமணியர் பவனி திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற
திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தெப்பல் உற்சவத்தின் நிறைவாக, ஐயங்குளத்தில் சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான மகா தீபபெருவிழா கடந்த 3ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. அன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்திர தீர்த்தம் எனப்படும் ஐயங்குளத்தில் கடந்த மூன்று நாட்களாக தெப்பல் உற்சவம் நடந்தது. அதன்படி, முதல் நாளான்று சந்திரசேகரரும், இரண்டாம் நாளன்று பராசக்தி அம்மனும் தெப்பலில் பவனி வந்து அருள்பாலித்தனர். அதன் தொடர்ச்சியாக, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நேற்று இரவு நடந்தது.
அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் இருந்து அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியர், சன்னதி தெரு, ஐயங்குளத்தெரு வழியாக ஐயங்குளத்தை அடைந்தார். அப்போது, சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட தெப்பலில், ஐயங்குளத்தில் மூன்றுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குளத்துக்குள் இறங்க பக்தர்களை அனுமதிக்காமல் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு குளத்தை சுற்றிலும் மின்னொளி அலங்காரத்தில் எழில்மிகு காட்சியளித்தது. மலர் அலங்காரத்துடன் வலம் வந்த தெப்பல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், தீபத்திருவிழாவின் நிறைவாக சண்டிகேஸ்வரர் உற்சவம் இன்று நடக்கிறது. பஞ்சமூர்த்திகளில் ஒருவராக தீபத்திருவிழாவில் பவனிவந்து அருள்பாலித்த சண்டிகேஸ்வரர், வெள்ளி ரிஷப வாகனத்தில் மாட வீதியில் இன்று இரவு பவனி வருகிறார். மேலும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும் உடன் பவனி வருகிறார். இன்றையை நிகழ்வுடன் இந்த ஆண்டுக்கான தீபத்திருவிழா முழுமையாக நிறைவு பெறும். இந்நிலையில் மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபத்தை வரும் 13ம் தேதி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். இதற்காக அண்ணாமலையார் கோயில் திருப்பணியாளர்கள் மற்றும் பருவத ராஜகுலத்தினர் மலை மீது சுழற்சி முறையில் முகாமிட்டு தினமும் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுகின்றனர்.


