Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் வீடியோ வைரல் அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு போலீஸ் வலை ஆரணி அருகே நிலத்தகராறில் முன்விரோதம்

ஆரணி, நவ. 7: ஆரணி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2 பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவை சேர்ந்த பழனி. இவரது மகன் சுந்தர்(32), லாட்ஜ் மற்றும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஆரணி அடுத்த சேவூரில் 2.80 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2019ம் ஆண்டு அவரது பக்கத்து நிலத்தின் உரிமையாளர் ஆரணி டவுன் விஏகே நகரை சேர்ந்த அதிமுக மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜனுக்கு விற்பதற்காக அக்ரிமெண்ட் போட்டுள்ளார்.

அப்போது கோவிந்தராஜன் ஒரு குறிப்பிட்ட தொகையை நிலத்தின் உரிமையாளர் சுந்தரிடம் கொடுத்து, மீதமுள்ள பணத்தை கொடுத்துவிட்டு நிலத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள காலஅவகாசம் கேட்டுள்ளார். இதனால், சுந்தரும் ஒப்புக்கொண்டு, மீதி பணத்தை குறிப்பிட்ட காலத்தில் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் கோவிந்தராஜன் பணத்தை கொடுக்காமல் இருந்ததால் சுந்தர் பலமுறை நிலம் விற்பனை செய்த பணத்தை கொடுக்குமாறு பலமுறை கேட்டு வந்துள்ளாராம். ஆனால், கோவிந்தராஜன் பல்வேறு காரணங்கள் கூறி பணத்தை கொடுக்காமல் இருந்ததால் அந்த நிலத்தை சுந்தர் தனது தங்கைகள் பெயரில் மாற்றியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சுந்தர் அவரது தாய் சிவகாமி, தங்கை லட்சுமி மற்றும் உறவினர்கள் நேற்றுமுன்தினம் விவசாய பணிகள் மேற்கொள்ள அவர்களது நிலத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்குவந்த கோவிந்தராஜன் அவரது மகன் ஆனந்தன் இருவரும் சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினரை நிலத்திற்கு வரக்கூடாது எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கோவிந்தராஜன், ஆனந்தனும் சேர்ந்து அவர்களிடமிருந்த செல்போனை பறித்து வீசினார்களாம்.

தொடர்ந்து, லட்சுமி, சிவகாமியை ஆபாசமாக பேசி இருவரையும் கீழே தள்ளி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுந்தரின் தங்கை லட்சுமி, அவரது தாய் சிவகாமியை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விவசாய நிலத்தில் பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வைரலானது. இதுகுறித்து லட்சுமி ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலை மறைவாக உள்ள அதிமுக மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன், இவரது மகன் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.