Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொட்டும் மழையிலும் 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் ரயில் நிலையத்தில் தவித்த பக்தர்கள் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி

திருவண்ணாமலை, நவ. 6: திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று 2வது நாளாக பக்தர்கள் கொட்டும் மழையில் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு தொடங்கி, நேற்று இரவு 7.29 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் நடைபெறுவதால், இந்த பவுர்ணமி கூடுதல் சிறப்புக்குரியது. அதனால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது. நகரின் அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் வரிசையாக நின்றன. எனவே, இந்த பவுர்ணமி கிரிவலம், தீபத்திருவிழா போல காட்சியளித்தது. இந்நிலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று இரவு 7.29 மணி வரை அமைந்திருந்ததால், இரண்டாவது நாளாக நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை நடை திறக்கும் ேபாதே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கோயில் வெளி பிரகாரத்தில், வட ஒத்தைவாடை தெரு, தென் ஒத்தைவாடை தெரு வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.

ராஜகோபுரம் வழியாகவும், அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல ஏற்பாடு ெசய்யப்பட்டிருந்தது. வழக்கம் போல, கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை நேற்றும் ரத்து செய்யப்பட்டன. பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வழி தரிசன வரிசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும், அம்மணி அம்மன் கோபுரம், கிளி கோபுர நுழைவு வாயிலில் நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 7.29 மணிவரை பவுர்ணமி இருந்ததால் அதிகளவில் பக்தர்கள் கிரிவலம் வந்தபடியே இருந்தனர். அப்போது திடீரென இரவு 7 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் ‘ஓம்நமச்சிவாய’ என பக்தி முழக்கமிட்டபடி கிரிவலம் சென்றது அனைவரையும் சிலிர்க்கவைத்தது.

மேலும், பவுர்ணமி கிரிவலம் முடிந்து ஊர் திரும்ப பக்தர்கள் குவிந்ததால், பஸ் நிலையத்திலும், ரயில் நிலையத்திலும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. பவுர்ணமி சிறப்பு ரயில் மற்றும் தினசரி ரயிலில் நிற்க இடமில்லாத அளவில் பக்தர்கள் பயணித்தனர். அதனால், ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதியது. ரயிலில் பயணிக்க இடமின்றி முதியவர்கள், பெண்கள் தவிக்கும் நிலை காணப்பட்டது. எனவே, இனிவரும் பவுர்ணமி நாட்களில் பக்தர்களின் தேவையறிந்து, சென்னை, விழுப்புரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு கூடுதலான சிறப்பு ரயில்களை நேரடியாக இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.