பல்லடம், ஆக. 27: சுரைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைவான தண்ணீரில் நல்ல விளைச்சலை கொடுக்கக் கூடியது சுரைக்காய் ஆகும். இதற்கு உற்பத்தி செலவு மிகவும் குறைவு. இதில் பாம்பு சுரை, கும்பச்சுரை என இரண்டு மூன்று ரகங்கள் உள்ளது. வைகாசி பட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியதால் விவசாயிகள் சுரைக்காய் சாகுபடி செய்திருந்தனர்.
அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சுரைக்காய்க்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பொங்கலுார் வட்டார விவசாயிகள் கூறுகையில், ‘‘தக்காளி விலை உயர்ந்ததால் அதற்கு மாற்றாக சுரைக்காயை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால் ஒரு சுரைக்காய் 25 ரூபாய் வரை விலை போகிறது’’ என்றனர்.