பல்லடம், ஜூலை 29: பல்லடம் அருகே கோடங்கிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் மது அருந்திவிட்டு, வெளியே மலம் கழித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, பள்ளி வளாகத்துக்குள் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள், வகுப்பறைகள் திறந்து கிடப்பது கண்டு, தலைமை ஆசிரியை சரஸ்வதியிடம் தெரிவித்தனர். பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணையில் தலைமை ஆசிரியை அறையின் பூட்டை உடைத்து, அறையில் இருந்த சாவியை எடுத்து வகுப்பறைகளை மர்மநபர்கள் திறந்துள்ளனர். கணினி அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த டிவியை ஆன் செய்து பார்த்து கொண்டும் மது அருந்தியபடியும், புகை பிடித்தும் பொழுதை கழித்துள்ளனர். அதன் பின்னர் வகுப்பறைக்கு வெளியே மலம் கழித்து விட்டு, எடுத்து வந்த சாவியை மீண்டும் தலைமை ஆசிரியை அறைக்குள்ளேயே தூக்கி வீசி சென்றுள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.