பல்லடம், செப். 24: சூலூர் விமானப்படை தளம் பகுதியில் வசிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த குடும்பத்தினர் இணைந்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடி வருகின்றனர். இவர்கள் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோயிலில், ஆண்டு தோறும் நவராத்திரி வழிபாடு கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி நேற்று நவராத்திரியை முன்னிட்டு துர்கா தேவி சிலை பிரதிஷ்டை செய்யும் பணி துவங்கியது. இதனை முன்னிட்டு, காரணம்பேட்டை பெருமாள் கோவிலுக்கு வந்த வட மாநில குடும்பத்தினர். வழிபாடு நடத்திய பின் பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக சென்று நவராத்திரி ஒட்டி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குடிலில் வைத்து வழிபாட்டை துவக்கினர். நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.